இந்தியா - நேபாளம் பெட்ரோலியம் பைப் லைன்: தெற்காசியாவின் முதல் திட்டம் துவக்கப்பட்டது
ரத்தன் சல்தி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் லஷ்மண குமார்.
இந்தியாவும் நேபாளமும் தங்களுக்கிடேயேயான இரு தரப்பு உறவுகளில் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளன. இந்தியாவின் பிஹார் மாநிலத்திலுள்ள மோதிஹாரியிலிருந்து நேபாளத்தின் ஆம்லேக்குஞ்க்கு பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்லும் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் காணொளிக்காட்சி மூலம் கூட்டாக துவக்கி வைத்தனர். எல்லை கடந்த இந்த திட்டம் தெற்காசியாவில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ளது. 69 கி.மீ நீளம் கொண்ட இந்த பைப் லைன் திட்டத்தில் 32.7 கி.மீ தூரம் இந்தியாவிலும், 37.2 கி.மீ நேபாளத்திலும் உள்ளன. இரண்டு டன் சுத்தமான பெட்ரோலிய பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் தடையின்றி வருடந்தோறும் நேபாள மக்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் வழங்கமுடியும்.
இந்த திட்டம் இந்தியா - நேபாளம் இடையே நெருங்கிய இருதரப்பு உறவுக்கான குறியீடு என்று கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மோதிஹாரி - ஆம்லேக்குஞ் பெட்ரோலிய குழாய் திட்டம் எரிபொருள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும், எரிபொருள் கொண்டு செல்வதற்கான செலவினங்களையும் குறைக்கும் என்று கூறினார். உயர்மட்ட அரசியல் நிலையிலான தொடர் பரிமாற்றங்கள் மூலம் இந்திய - நேபாள கூட்டளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கான சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். புது தில்லியிலிருந்து இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோதி, இரு நாடுகளுக்கிடையேயான இரு தரப்பு உறவுகள் மேலும் ஆழமாகும், பல்வேறு துறைகளுக்கு பரவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நேபாளத்தின் வளர்ச்சிக்கு உதவும் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி காத்மாண்டுவில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி வர்த்தகம், பரிமாற்றம் மற்றும் கட்டமைப்புக்கான இணைப்பிற்கு இந்த குழாய் திட்டம் ஒரு சிறந்த உதாரணம் என்று வர்ணித்தார். திடமான அரசியல் அர்பணிப்பின் பின்னனியில் இந்தியாவும்-நேபாளமும் வளர்ச்சி, வளம் மற்றும் மகிழ்ச்சி குறித்து ஒரே மாதிரியான சிந்தனை கொண்டுள்ளது மேலும் அதை அடைவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்று அவர் கூறினார். நேபாள மக்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைப்பதாகவும் அவர் அறிவித்தார். இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களை எடுத்து செல்வதன் மூலம் நேரமும் செலவும் மிச்சமாவது மட்டுமல்லாமல் சாலை போக்குவரத்து குறைந்து டேங்கர் மூலம் எடுத்து செல்லும்போது ஏற்படும் காற்று மாசும் குறைகிறது என்று அவர் கூறினார்.
1973 ஆம் ஆண்டு முதல் நேபாளம் தனது முழு பெட்ரோலிய தேவைகளுக்கு இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதை எடுத்து செல்வதற்கு எண்ணெய் டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2007 ஆம் ஆண்டு, இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பொரேஷன் பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரக்ஸ்ஸவுள் சேமிப்பு கிடங்கிலிருந்து நேபாள் ஆயில் கார்பொரேஷனுக்கு 2020 ஆண்டு வரை எண்ணெய் வழங்கும் ஒப்பந்தத்தை புதுப்பித்தது.
1996 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மோதிஹாரி - ஆம்லேக்குஞ் குழாய் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோதியின் நேபாள பயணத்தின் போது இந்த திட்டம் புத்துயிர் பெற்றது. இரு நாடுகளின் முன்னனி எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பொரேஷன் மற்றும் நேபாள் ஆயில் கார்பொரேஷனும் இந்த திட்டத்தை நிறைவேற்ற 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாள பிரதமர் இந்திய வந்திருந்த போது புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருந்து தொலை உணர்வு கட்டுப்பாடு மூலம் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த திட்டத்தை 30 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகளின் அயராத முயற்சியால் திட்டமிட்ட காலத்தின் பாதியிலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஒன்று வெகுவிரைவில் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு சாதனை. இந்தியாவின் உதவி மூலம் நேபாளத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் காலதாமதமாகி செலவு அதிகமாகிறது என்ற குற்றச்சாட்டும் இதன் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தற்சமயம் நடைபெறும் திட்டங்களை மறு ஆய்வு செய்ய உயர் மட்ட கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த மாதம்தான், இந்திய - நேபாள கூட்டு குழுவின் கூட்டம் இரு நாட்டு வெளி உறவு அமைச்சர்கள் தலைமையில் காட்மாண்டுவில் நடைபெற்றது. இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள், கூட்டுறவிற்கான புதிய பகுதிகளை கண்டறிதல் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை மறு ஆய்வு செய்தல் ஆகியன இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் திருப்தி தெரிவித்துள்ளனர். நேபாளத்தில், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா 50,000 வீடுகள் கட்டி தந்ததற்கு திரு ஓலி நன்றி தெரிவித்தார்.
Comments
Post a Comment